கடவுள் – வேற்றுமை – இணைதல்

இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒரு தனிவிதமான சூழ்நிலையில் வேறுபட்ட கருத்துக்களை கொண்டவர்களாக வாழ்கின்றோம். இங்கே வேறுபட்ட, வெவ்வேறான கருத்துக்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் இடம் உண்டு. ஆனால், கடவுள் பற்றிய கருத்தை எடுத்துக் கொண்டாலும் கூட நாம் வேறுபடுகின்றோம். இதில் அறிவியலைப் புகுத்தி நாம் மற்றோரு வழியில் சிந்திக்கின்றோம்.
எப்படித்தான் நாம் கடவுள் பற்றிய கருத்தில் பேசினாலும் இன்னும் பல கருத்துகளில் நாம் விவாதித்தாலும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஒரே கேள்வி
கடவுள் இருக்கின்றாரா?
இங்கே பதில் வேண்டுமானால் இரண்டாக (ஆம், இல்லை) இருக்கலாம். இந்த கேள்வி ஒவ்வொருவராலும் கேட்கப்படும், கேள்விக்கு உள்ளாக்கப்படும் ஒன்று. ஆதலால், இந்த கேள்வியால் நாம் ஒன்று சேரவில்லை. ஆனால், இந்த கேள்விக்கு காரணகர்த்தாவாக விளங்கும் கடவுளால் ஒன்று சேர்கின்றோம்.
Comments
ஆன்மீகவாதிகளின் கூற்றுப்படி "கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்".
அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி "இதுவரை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை"
பகுத்தரிவாதிகளின் கொள்கையின்படி "கடவுள் இல்லை கடவுள் இல்லை, கடவுளை மற மனிதனை நினை"
இப்படி ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கின்றன.
ஆன்மீகவாதி என்று சொல்பவன் உண்மையில் அவன் குறிப்பிடும் கடவுள் வழி நடக்கின்றானா என்பது சந்தேகமே! ஏனெனில் பெரும்பாலான ஆன்மீகவாதிகள் (அவன் வணங்கும்) கடவுள் சொல்கின்ற புனித கருத்துக்களின்படி வாழ்கின்றார்கள் என்பது ஏற்றுகொள்ள முடியாது, ஏனெனில் அப்படி வாழ்கின்ற ஒருவர் இருப்பாரேயானால் அவரும் ஒரு கடவுளே!
ஆனால் நடைமுறையில் நாம் எத்தனை மனித கடவுளை காண முடிகிறது... யாரையும் குறிப்பிட முடியவில்லை. ஆன்மிகம் என்ற போர்வையில் இருக்கும் சாமியார்களைக்கூட நம்ம முடியவில்லை...
கடவுளை இதுவரை ஏற்றுக்கொள்ளாத அறிவியல் சமூகமும் கூட பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அவ்வபோது கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடவுளை தவிர. (ஒருவேளை ஆறறிவு போதாதோ).
கடவுள் இல்லை என்று சொல்கின்ற பகுத்தறிவாதிகளும் கூட கடவுளை மறக்க சொல்கிறார்கள், மனிதனை நினைக்க சொல்கிறார்கள். அப்படி கடவுள் என்ற மனபிம்பம் கூட இல்லை எனில் மனிதன் என்பவன் மனிதனாக இருப்பானா இல்லை காட்டுமிராண்டியாக வாழ்வானா என்ற சந்தேகம் வருகிறது.
ஒரு தரப்பினர் வணங்கும் கடவுளை இன்னொரு தரப்பினர் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் ஒவ்வொரு தரப்பினரும் பிரசாரம் என்ற பெயரில் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதக்கோட்பாடுகளை முன்வைத்துக்கொண்டு பிரசாரம் செய்வதால் உலகில் அமைதி நிலவாமல் மாறாக வன்முறைகளும், தீவிரவாதமும் மட்டுமே நிலவுகிறது. இச்செயலை எந்தவொரு கடவுள் சக்தியாலும் தடுக்க முடியவில்லை.
முடிவாக, இதற்கு தீர்வுதான் என்ன என்று சொல்வது...
சாத்தியப்படக்கூடிய சில கருத்துக்களை நடைமுறையில் ஏற்றுக்கொண்டாலே ஓரளவிற்கு உலகம் சுபிச்சமடையும். அவை...
1 . கடவுள் ஒருவரே, நாம்தான் அவருக்கு பல பெயர்களை, பல உருவங்களை, பல கோட்பாடுகளை வைத்துள்ளோம்.
2 . ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியாக இருந்தாலும் போய்ச் சேருகின்ற இடம் ஒன்றுதான்.
3 . எல்லோரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள் என்பதை ஒவ்வொரு தனிமனிதனும் நம்ப வேண்டும்.
4 . மதம் மனிதனை நல்வழிப்படுத்தவே புனிதமானவர்களால் உருவாக்கப்பட்டது, இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் இல்லை.
"மற்றபடி உண்மையான கடவுள் யார் என்று நாம் தெடுவதுற்குள், நாமே அவரிடம் சென்றுவிடுவோமோ என்னவோ... இறந்தபின்... "
"யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன், ஊருக்கே வாழ்ந்துயர்தவன் புனிதன்" - என்ற பாடல் வரிகளுக்கேற்ப புனிதனாக வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை, மனிதனாக வாழ முயற்சி செய்வோம்.
- கார்த்திக், மதுரை.